Friday, 28 November 2014

பாரதிதாசன்

கடலின் ஆழத்தை
கடற்கரைத் துகளொன்று
அணுவிலும் அணுவொன்று
ஆராய்ந்து பார்க்கிறது.

எத்துணை சிறிய இடத்திலும்
பதுவிசாய் அமரும்
புதுக்கவிதை போல
எத்துணை சிறிய பாக்களிலும்
பளிச்சிடும் பொறிகள்

காயசண்டிகையாய்
காய்ந்திருந்த தமிழுக்கு
அமுத சுரபியை
அளித்த மணிமேகலை

உனது
பாக்களின் கால்கள்
பட்டபோதுதான்
அகலிகை மனங்கள்
அறிவு பெற்றன.

உனது
"பா" ரதத்தில்
பவனி வருகையில்
சங்கத்தமிழ்
தங்கமாய்த்தான்
தகதகக்கிறாள்

எங்களை
மூட நம்பிக்கையுடன்
இணைத்த நூல்களை
கத்தரிபோல்
கத்தரித்தவை
உன் கவிதைகள்

தாமரைப்பூத்த
தடாகங்களை கண்ட
கவிஞரெல்லாம்
பாவைகளின் அழகை
பாத்தபோது
படைத்தவன் கையை
பார்தவன் நீ

ஆராய்ச்சி செய்த
அணுவிலும் அணுவொன்று
முடிவில்
முணுமுணுத்தது
தமிழ்க்கடலில்
பேனாத்தூண்டிலால்
எடுத்த சொற்களால்
எழுதிய உன்னை
வாழ்த்தத் தோன்றவில்லை
வணங்கத்தான் தோன்றுகிறது

No comments:

Post a Comment