சின்ன மொட்டிற்கு
இதழ்விரி
என்று
யாரும் சொல்வதில்லை
என்
பட்டுக்குட்டி
உன்னைமட்டும்
எழுப்பவேண்டியிருக்கின்றதே
காலையில் சரியா?
குட்டிப்பூனையும்
பாலிருக்கும் இடத்தைப்
பார்த்து வருகிறது
என்
செல்லப்பூவே
உனக்கு மட்டும் பாலை
உன்னருகில் கொண்டுவர வேண்டியுள்ளதே
சரியா?
பார்
சின்னஞ்சிறு குருவிகளை
பழக்கமாய்
குளிக்கச் செல்லும்
குழிகளில் தண்ணீர்கிடந்தால்
சிறகுகளை சிலுப்பி
சீக்கிரம் காயவைக்கும்
என்
வண்ண மயில்!
உனக்கு மட்டும்
குளிக்க வைக்க
எல்லாம் எடுத்துவைத்தும்
எத்தனைமுறை கத்தவேண்டியுள்ளது?
அதுவும்
தலைகுளித்தால்
காயவைப்பதற்குள்
காய்ந்துபோகும் என் தொண்டை.
பழங்கள்
பல திண்ணும்
பக்குவமாய் உயிர்களுமே.
மாதுளையைத் தவிர
மகத்தான பழம் எதையும்
தீண்டாமலிருப்பது
வேண்டாத செயலல்லவா?
அந்தந்த காலத்தில் கிடைக்கும் பழங்கள்
அத்தனையிலும்
சிறிதளவே தின்றாலும்
சீக்கு வருமாடி கனிமொழியே...
மின்மினி பூச்சி கூட
சிறகடிக்கும் நேரம்தான்
ஜொலிக்கிறது
அதனால்
உடற்பயிற்சி செய்தால்தான்
உடல்வலிமை பெறும்
கடல் வலிமை வரும்
கலாச்சார பழக்கங்களை
கணிப்பொறி காலத்திலும்
மறக்காமல் இருந்தால்
மருந்து எதுவும் வேண்டாம்.
தியானத்தால் போகாத
தீராத நோய் இல்லை
உள்ளுக்குள் இறைவன்
உறைகின்றான்.
உறுப்புகளிலெல்லாம் வியாபித்திருக்கின்றான்
என்ற
எண்ணத்தில் உடல் காத்தால்
என்ன ஆனாலும்...
எதுவுமே ஆகாது மனதிற்கு
குக்கரில் சாதம் வைத்தாலும்
குனிந்து கோலம் போட தவறாதே...
மனசு T.V. பார்க்க
மக்கரே செய்தாலும்
விடியலில் நடந்து
விரட்டு நோயை
ஓஸோன் காற்றை
உள்வாங்கு
'ஓஷோ'வின் வரிகளில்
உள்ளத்தை கொடு.
கண்களுக்குப்
பசுமையை விருந்தளி
கருவிழியை பந்தென நினைத்து
நீயே
இரண்டு நிமிஷம் உருட்டி விளையாடு
பார்வையின் வீச்சும்
பார்வையின் கோணமும் விரியட்டும்.
“பார்வையை அகண்டமாக்கு”
பாடிய
பாரதிதாசனை நினை
மேலோட்டமாகவும்… ஆழத்தோடும்…
எப்போதும்
எதையேனும் நினைத்து
உழன்றுகொண்டேயிருக்கும்
உள் மனத்திற்குள்
ஒரு “குறளை” எழுதிப்போடு.
மாவரைக்கும் இயந்திரமாய்
மனசு
குறளை ஆட்டிப்பார்க்கட்டும்
நித்தம்
ஒரு
புத்தம் புதுவிஷயம் தெரிந்துகொள்..
அவ்வப்போது
இசையை கேள்…
மனதை லேசாக்கு…
உனக்குள் வாங்கி கரைந்துபோ…
மீண்டும் உருவம் கொள்கையில்
மீண்ட சொர்க்கமாய் தெளிவுகொள்.
உலகத்து விஷயமெல்லாம்
கரைத்துக் குடித்தாலும்…
மூளையில்
ஏராள இடமுண்டு..
நாம்
கற்பது கையளவு..
அதனால்
அறிவை விரிவு செய்….
உன்னால்
கடைசி கவளம் விழுங்கமுடியும் முன்
கல்வியின் மேல்
காதல் கொள்.
எப்போதும் நம்பிக்கை கொள்
இடையறாது உழை.
பொழுதுபோக்கு வைத்துக்கொள்
அதுவும்
புலன்களை காப்பதாய் இருக்கட்டும்
உறவுகளை மட்டுமல்ல
உன்னருகில் உள்ளவர்களை மதி.
“தன்னை நம்பும் மனிதனையே
உலகம் நம்பும்”
என்ற
தத்துவ வரிகளை
தலையாய வரியாக நினை.
உன்னை உயர்வாக
முதலில்
நீயே நினை.
ஒவ்வொரு படிக்கட்டிலும்
உழைத்து முன்னேறு..
சங்கடங்கள் வந்தால்
சரித்திரமாக்காதே
தரித்திரமாகாதே
பவித்திரமாக அனுபவம் கொள்.
உயரத்தில் ஏறுவதை விடவும்
தக்கவைத்துக் கொள்ளுதல்
தரணியில் கடினம்
அதற்கு
அயராது சிந்தனை செய்.
சிலசமயம்
தவறுகள் நேரலாம்
அதற்கு
தண்டனையாக தாழ்ந்து போகாதே.
அந்த
ஆகாய நிலவிலும் கருமை உண்டு
ஆதாம் ஏவாளிலிருந்து
அண்டவெளி வரை
தவறுகள் உண்டு
தைரியமாய் உரக்கச்சொல்
அதன்பின்
அமைதி காண்பாய் மனதில்.
இடம் பொருள் காலம் பார்த்து
எதையும் செய்
தோல்வியெனில் துவளாதே
வெற்றியெனில் துள்ளாதே
மகிழ்ச்சி கொள்
அவ்வப்போது நினைத்துப்பார்த்து
அடுத்த
ஆக்கத்திற்கு அடித்தளம் போடு
மனிதர்களில் பலருண்டு
எத்தனைபேர்
மத்தியில் இருந்தாலும்
தனித்திரு, பசித்திரு, விழித்திரு.
உனக்கென்று
ஓர் இடம்… தனித்தமனதோடு
தாமரை இலைநீராய் ஒட்டாதிரு
ஆரவாரங்களுக்கிடையிலிருந்தாலும்
உன்
ஆழ்மனது திருவாசகம் பாடுவது
அனைவருக்கும் தெரியாதிருக்கட்டும்
புலன் உறுப்புகள்
பூ வுலக மகிழ்ச்சியில் திளைத்திருக்க
உள்ளிருக்கும் இறைவனுக்கு
உன்னத நிவேதனம் செய்
பசித்திரு
பசித்திரு என்றால் வயிறு அல்ல…
செவிப்பசி
சிந்தனை ருசிப்போடு
சீராய் கிடைக்கும்
பகுத்தறிவை
பகிர்ந்து உண்.
எப்போதும்
எதையேனும்
தெரிந்து கொள்ள தாகம் கொள்
உன்
வாசிப்பிற்கு
வானத்திற்கு மேலேயும்
எல்லைகள் விரியட்டும்.
வாசிப்பு என்பது
அருமையான அமுதம்
அது பருக பருக இன்பம்
வாசிப்பது என்பது
புத்தகத்தை மட்டுமல்லை.
ஒவ்வொரு அணுவையும் வாசி…
உன் அனுபவத்தையும் வாசி…
வாசித்தபின் யோசி…
அது
பாசியான சந்தேகங்களையும்
பளிச்சிட வைக்கும்.
‘விழித்திரு’ என்பது
விழிகள் சம்பந்தப்பட்டது அல்ல.
எது வேண்டுமானாலும்
எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்.
அத்தனையையும்
எதிர்கொள்
விழிப்பாயிருந்து வெற்றிகொள்.
உறவுகள் எதிரியாகலாம்
உண்மைகள் பொய்யாகலாம்
தன்னந்தனியாக
நீ தவிப்பதுபோல் தோன்றலாம்…
எதுவாயினும்…
வருமுன் காத்து…
வந்தபின் பாத்து
விழிப்பாயிருந்து…
செழிப்பாக்கு வாழ்க்கையை…
உனக்கு
என்னால்
உலகத்தைப் புரியவைக்க முடியாது…
ஏனென்றால்
கடலை
கவிதைக்குள் காட்ட முடியாது...
இருப்பினும்
இந்த
கவிதை கண்ணாடி
உனக்கு பின்னாடி புரியும்..
உனக்கு முன்னாடி நிற்கும்
உலகத்தைப் புரியவைக்கும்.
ஒன்றே
ஒன்று மட்டும் சொல்கிறேன்
"அந்த வாசகம்
மிகவும் சிறியதுதான்
ஆனால் மிகச்சிறந்தது"
அது
"இந்த நிலையும் மாறிவிடும்"
இடுக்கண் வருங்கால்
சிரிக்க முடியாவிட்டாலும்
இந்த வைர வரிகளை நினை
நீ
என்றென்றும் ஜொலிப்பாய்
என் கண்மணி!
தாயுமானவரை
இந்த உலகம் அறியும்
தந்தையுமானவளை
நீ மட்டும் அறிவாய்!
No comments:
Post a Comment